செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களின் நம்பிக்கை

சடங்குகளைப் பற்றி மேலும் பார்க்கும் முன் சாலியர்களின் சில வட்டார பழக்கங்கள், பேச்சுவழக்கில் வந்த வார்த்தைகளையும் பார்ப்போம்.

1. நூலில் கலர் சரியாக பரவாமல் திட்டு திட்டாக பிடித்திருந்தால் கலர் பூராவும் சாரல் என்பார்கள். அதாவது மழைச்சாரல் போல விட்டு விட்டு பிடித்திருக்கிறதாம்.

2. பொய் சொல்பவனை சரடு விடுறான் என்பார்கள்.

3. தறி "தில்லையன் கால் மாதிரி ஆடுகிறது" என்பார்கள். அதாவது சிதம்பரம் தில்லை நடராஜர் போல ஆடுகிறதாம்.

3. நெய்யும் போது நிறைய இழைகள் அறுந்து விட்டால், நெய்பவர் முறையாக கட்டாமல் தன் இஷ்டப்படி கட்டிவிட்டால் "தெத்து நிறைய விழுந்து விட்டது" என்பார்கள். ஒருவருக்கு பல் நெட்டையும் குட்டையுமாக மாறி மாறி இருந்தால் அவனை "தெத்துப்பல்லன்" என்பார்கள். இந்த வார்த்தை நாம் கொடுத்தது.

4. பாவு தோயும் போதும், நெய்யும் போதும் கோழி இறகு அல்லது குருவி இறகு பறந்து விழுந்தால் அந்தத் துணி பிரியமாக விலை போகுமாம். (இறகு பறப்பது போல பறந்துரும்).


5. பாவு காலியான பிறகு கீழ்த்தடியிலிருந்து பாவு சுற்றும் உருளை வரை இருக்கும் மீதமான பாவு தறிக்கிடைப் பாவு எனப்படும்.

6. பாவு தோயும் போது அளவில் குறி போடுபவர் அன்றைய நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.



7. தெருவில் பாவு சுற்றும் நபர் பின்னால் யாரும் வந்தால் அபசகுனம் என்பது நம்பிக்கை.

8. நிறை பாவில் முட்டிக்கை ஊன்றக் கூடாது.

9. சனிக்கிழமை பாவு பிணைக்கக் கூடாது. அபசகுனம்.

10. கார்த்திகையன்று நெய்தால் தரித்திரம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது பவர்லூம் வந்ததும் இந்த நம்பிக்கை கைவிடப்பட்டது. சில இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

11. பாவு பிணைத்து நிரட்டு விழுந்த துணியை உபயோகிப்பது விசேஷமாம். (சிக்கனத்துக்காக ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம்)

12. ஒரே வீட்டில் 3 தறி நெய்வது விசேஷம் இல்லையாம்.

13. கத்திரிக்காய் தோட்டக்காரனுக்கு சொத்தைக் காய். நெய்பவனுக்கு முறிவு துணி (மீதமான துணி)

14. உடுத்திய வேட்டியை கழற்றியபின் தான் நெய்ய வேண்டும். (சாயம் வெள்ளை வேட்டியில் ஒட்டாமல் இருக்கவும், காலை ஆட்ட சிரமம் இல்லாமல் இருக்கவும்)

15. அதிகாலை எழுந்து நெய்யாதவன் நெசவு, அரை நெசவு ஆகும்.

16. தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. இந்தப் பழமொழி நாம் தமிழுக்கு கொடுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar