சனி, 24 செப்டம்பர், 2016

சாலியர், பத்மசாலியர் தோற்றம்

உலகத்தின் ஆதியில் பஹவான் நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இருக்கும் சமயத்தில் தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து (தொப்புளில் இருந்து) பிரம்மதேவரை படைத்தார்.

பிரம்மதேவர் தனக்கு நிகரான ஒன்பது ரிஷிகளைப் படைத்தார். அவர்களுல் ஒருவர் பிருகு மஹரிஷி. இவரே பத்மசாலியர்களின் மூல புருஷர்.

பிருகு மகரிஷியின் மனைவி ஷாதினி. இவர்களுக்கு மூன்று புத்திரர்கள். அவர்கள் தாத்ரு, விதாத்ரு மற்றும் லக்ஷ்மி தேவி.

விதாத்ரு, நியதி என்பவரை மணந்தார். லக்ஷ்மிதேவி மஹாவிஷ்ணுவை மணந்தார். (தாத்ருவை பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை)

விதாத்ரு - நியதி தம்பதியினரின் மகனாக ம்ருகண்டு மஹரிஷி பிறந்தார். ம்ருகண்டு மஹரிஷி, முத்கல முனிவரின் மகளான மருத்துவதியை மணந்தார்.

ம்ருகண்டு - மருத்துவதி தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து மார்க்கண்டேய மஹரிஷி தோன்றினார்.

அல்பாயுளாக தோன்றிய மார்கண்டேயரை நோக்கி, உரிய காலத்தில் எமதர்மர் பாசக் கயிறை வீசினார். மார்க்கண்டேயர் ம்ருத்துஞ்சய மந்திரத்தை சொல்லி சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டார்.


சிவபெருமான் நேரில் தோன்றி, மார்கண்டேயருக்கு தீர்காயுள் வழங்கி "சிரஞ்சீவி ஆகு" என்று வரம் தந்தார்.

அந்த காலகட்டத்தில் காலபாசுரன் என்ற அசுரனின் தொந்தரவு அதிகரித்து வந்தது. இவனை அழிப்பதற்கு மார்கண்டேயரின் புதல்வரால் மட்டுமே முடியும் என்று யாகபுருஷன் மூலம் தெரியவந்தது.

மார்கண்டேயர் பிரம்மச்சாரி. உலக நன்மைக்காக திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டார். பின்னர் அக்னிதேவரின் மகளான பூம்ரவதியுடன் மார்கண்டேயருக்கு திருமணம் ஆயிற்று.

இவர்களின் மகனாக பாவனரிஷி தோன்றினார். இதே காலகட்டத்தில் பிரம்மா தனது படைப்பு தொழிலால் ஏராளமானவர்களை படைத்தார். தோன்றியவர்கள் அனைவரும் வஸ்திரத்துக்கு சிரமப்பட்டனர். நாராயணன் பாவனரிஷிக்கு வஸ்திரம் நெய்யும் கலையை போதித்தார். நாராயணர் பாவனரிஷிக்கு தனது நாபி கமலத்தில் உள்ள தாமரை தண்டினை கொடுத்து அதில் வரும் ஷாலியை {நூலால்} தேவாதி தேவர்களுக்கு வஸ்திரம் இழைக்க சொன்னார்

"உன்மூலமாக பிறப்பவர்கள் அனைவரும் என்னவரே... நீங்கள் உலகத்துக்கு வஸ்திரம் வழங்கி மானம் காப்பீர்கள்.பத்ம ஷாலியர் என்று அழைக்கப் படுவீர்கள்" என்று நாராயணன் வரமளித்தார்.
ஷாலி என்றால் நூல்.
பத்மத்தின் ஷாலி {நூலில் } இருந்து வஸ்திரம் இழைத்ததால் பத்மஷாலியர் எனப்பட்டனர்.

பாவனரிஷி சூரியதேவனின் மகளாகிய பத்ராவதியை மணந்தார். மார்கண்டேயர் சப்தரிஷி மண்டலத்தில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னினார்.
மின்னிக் கொண்டிருக்கிறார். பதினெட்டு புராணங்களில் மார்கண்டேய புராணமும் ஒன்று. சிவனை நோக்கி தவம் செய்து சிவலோகம் சென்றார்.

பத்மசாலிய மூல புருஷரான பாவனரிஷி தேவர்களுக்கு வஸ்திரம் நெய்து கொடுத்தார்.

பாவன ரிஷி - பத்ராவதி தம்பதியினருக்கு 101 குழந்தைகள்.
அந்த நூற்றிஒருவர்களே பத்மசாலியர்களின் கோத்திர நாயகர்கள்.

பாவன ரிஷி நாராயணிடம் ஐக்கியமாகி பாவநாராயண் என்றழைக்கப்பட்டார்.

சனி, 17 செப்டம்பர், 2016

சாலிய செட்டியார்கள்




கண்டறியப்பட்ட கல்வெட்டு
**



மாயவரம் போன்ற பகுதிகளில் சாலியர்கள், சாலிய செட்டியார்கள் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரிந்ததே. அதை மெய்பிக்கும் வகையிலான செய்தி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு 20 கிமீட்டர் தூரத்தில் மேல்மலையனூர் என்ற ஊர் உள்ளது.  இங்குள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்த அம்மன்.
இங்கு திருப்பணிக்காக ஆராயும் போது பழங்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வேட்டின் எழுத்து அமைப்பில் ஸ்ரீ மன் மகா மண்டலேசுவரம் என்று எழுதப்பட்டிருப்பதால், இது  விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வில் தெரிய வந்தது.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறும்போது, "ஸ்ரீ வேங்கடபதி  மகாதேவராயர் (கி.பி.1582-1619) காலத்தில், வாணாதராய முதலியார் (கி. பி.1587-1597) வேட்டவலம் நிலப்பகுதியின் பாளையக்காரராக இருந்தார். இந்த  பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டின்கீழ் மேல்மலையனூரும் இருந்து வந்திருக்கிறது  என்பதை புதிய கல்வெட்டின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

வாணாதராய முதலியாரின் பிரதிநிதியாக எல்லப்பிள்ளை என்பவ்ர் நியமிக்கப்பட்டு இவ்வூரில் குடிமை, நெசவு சம்மந்தப்பட்ட வரிகள் வசூலிக்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு எடுத்துக்கூறுகிறது. வசூலிக்கப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை ஊரில் அமைந்துள்ள இளையநாயனார் (ஸ்ரீமுருகப்பெருமான்) வழிபாட்டுக்குச்  செலவிடப்பட்டுள்ளது. மலையனூரில் நெசவுத் தொழிலை நெசவுக் குடியான மும்மடி செட்டியார் மற்றும் சாலிய செட்டியார் ஆகிய பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் ஊரில் குடியிருப்பவர்களிடமும், நெசவுக்குடிகளிடமும், பாவுக்கும் முழுத்தறிக்கும் முறையே அரைப்பணம், முக்கால் பணம், ஒரு பணம் என வரி வசூலித்துள்ளனர். இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும். கல்வெட்டை கொத்தியவன் கணக்கு எல்லப்பன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு இது.

கேரள சாலியர்கள்

கலிக்கோ துணி, கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து உருவானது. போர்த்துக்கீசியர்கள் இந்தத் துணிக்கு கலிக்கோ என்று பெயர் சூட்டினர். சாலியர்கள் எனப்படும் நெசவாளிகள் இந்

தத் துணியை நெய்துவந்தனர். இன்றும்கூட கேரளாவின் பேப்பூர் அருகே சாலியர் காலனி இருக்கிறது. அங்கு ஓடும் ஆறும் சாலியம் ஆறு என்றே அழைக்கப்படுகிறது. சாமுதிரின் அரசனால் இந்த நெசவாளிகள் கேரளாவில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களது பூர்வீகம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம். வலங்கை இடங்கை சண்டை ஏற்பட்டதில் இவர்கள் கேரளாவுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அது என்ன வலங்கை இடங்கை சண்டை? சோழர்கள் காலத்தில் அந்தணர் மற்றும் வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் வலங்கை இடங்கை என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுஇருந்தனர். 10-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் படைப் பிரிவில் இந்த வழக்கம் தோன்றியது. வலங்கைப் பிரிவில் 98 குலங்களும், இடங்கைப் பிரிவில் 98 குலங்களும் இருந்தன. வலங்கைப் பிரிவினர், மன்னர் படைகளில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். ஆனால், இடங்கையினர் பெரும்பாலும் சிறுவணிகர்களாகவும் தொழிலாளர்களாகவுமே இருந்தனர். இவர்​களிடையே பிரிவினைகள், மோதல்கள் இருந்தன. வலங்கை, இடங்கை வகுப்பின​ரிடையே ஏற்பட்டு இருந்த மோதல்கள் 19-ம் நூற்றாண்டில் கொலையிலும் கொள்ளை​யிலும் முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம், இரு வகுப்பினரும் அனுபவித்துவந்த உரிமை​களைப் பற்றியது. சென்னையில் சர் ஆர்ச்சிபால்ட் காம்ப்பெல் கவர்னராகப் பதவி ஏற்ற பிறகு வலங்கை, இடங்கைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. இடங்கையினர் அனைவரும் தொழிலாளர்கள். கிழக்​கிந்தியக் கம்பெனிக்கு அவர்களுடைய வணிகத்தில் உதவிசெய்து வந்தவர்கள்.

ஒரு சமயம், வலங்கையினர் எஸ்பிளனேட் மைதானத்தைக் கடந்து கோட்டைக்குச் சென்றபோது தப்பட்டை அடித்துக்கொண்டும், கரண்டிகளைத் தூக்கிக்கொண்டும், மணியடித்துக்கொண்டும் சென்றனர். அவ்வாறு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என, அதை எதிர்த்து இடங்கையினர் கவர்னரிடம் புகார் அளித்தனர். எஸ்பிளனேட் மைதானம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதில் உரிமைப் பிரச்னை ஏதும் கிடையாது என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான், பிரச்னை ஓய்ந்தது. கேரளாவுக்குச் சென்ற சாலியர்களிடமும்கூட, வலங்கை இடங்கை சண்டை நடந்து இருக்கின்றன என்பதை சாமுதிரின் குறிப்பேடுகள் கூறுகின்றன.

இதற்கிடையில், கோழிக்கோட்டில் இருந்து கலிக்கோ துணிகளை வாங்கி ஏற்றுமதி செய்துவந்த போர்த்துக்​கீசியர்கள், தாங்களே பருத்தி விளைவிப்பது என்று முடிவு செய்தனர். பிரேசிலில் பருத்தி பயிரிடுவதற்கு
முயன்றனர். அத்துடன், கோழிக்கோட்டில் இருந்த சாலியர்கள் சிலரை தங்களுடன் கப்பலில் அழைத்துச் சென்று பிரேசிலில் குடியமர்த்தி அங்கே இந்திய நெசவுக் கலையை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.